வரலாறு

           புனித ராஜகன்னி மாதா ஆலயம் தமிழ் நாட்டின் தென் மாவட்டமான, முத்துக்குளி நகராம் தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள ஒரு சிறிய அழகான கிராமமான கடகுளத்தில் அமைந்துள்ளது. கடகுளம் தூத்துக்குடிக்கு மேற்கே 70 கி.மீ தொலைவிலும் திருநெல்வேலிக்கு தெற்கே 70 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமரிக்கு கிழக்கே 59 கி.மீ தொலைவிலும் மேலும் திசையன்விளையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

          இக்கிராமம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாகியதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, திருவிதாங்கூர் அரசை மார்த்தாண்ட வர்மன் (1706 - 1758) என்ற மலையாள மன்னன் ஆண்டு வந்தார். அப்பொழுது அவரது அரண்மனையில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, அங்கிருந்த மக்களுள் சிலர் அரண்மனையை விட்டு வெளியேறி அருகிலுள்ள பகுதிகளில் குடியேறினார்கள்.

            அங்கே தேரிக்கரையில் அழகிய குளம் ஒன்று இருந்தது. குளத்தைச் சுற்றிலும் விளைநிலங்களும் மக்கள் வாழ்வதற்கேற்ப நல்ல இயற்கைச் சூழ்நிலைகளும் இருந்ததால் மக்கள் இங்கு வந்து குடியேறினார்கள். இந்த இடத்துக்கு 'கடகுளம்' என்று பெயர் சூட்டினார்கள். ஊரின் நடுவில் மக்கள் தாங்கள் வழிபடுவதற்கென புனித ராஜகன்னி மாதா கோவிலைக் கட்டி வழிபட்டனர். ஊருக்கு மேற்கே சில இந்து மறவர்களும் வந்து குடியேறினர். அந்த இடம் 'மறக்குடி' எனப்பட்டது. ஊருக்கு வடப் புறத்தில், 'ஆச்சரியபுரம்' என்ற பெயரில் சில பிரிவினை சபை கிறிஸ்தவர்களும் குடியிருந்து வந்தனர். அவர்கள் வாழ்ந்த இடம் இடையன்குடி கோவில் நிர்வாகத்தில் 'அய்யர்விளை' என வழங்குகிறது.

            மாதம் மும்மாரி பொழிந்து மக்கள் செழித்து வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் ராஜகன்னி மாதா கோவில் அருகே குடிநீர் கிணறு ஓன்று தோண்டப் பட்டது. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். பனைத்தொழில் மக்களின் பிரதான தொழிலாக இருந்து வந்தது. பனை மரம் மூலம் கிடைக்கும் பொருள்களான பதநீர், கருப்புக்கட்டி ஆகியவற்றை உற்பத்தி செய்தல், பனை ஓலையிலிருந்து பாய் முனைதல், பெட்டி செய்தல் போன்ற தொழில்களைச் செய்து வந்தார்கள். அப்பொருட்களை வியாபாரம் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வந்தனர். இன்னும் சிலர் தென்னை மரம், வாழை மரம், காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளைப் பயிரிட்டு அதன் மூலம் தங்கள் வருவாயைப் பெருக்கி வாழ்ந்து வந்தனர்.

            ஒரு காலக்கட்டத்தில் தொடர்ந்து 13 ஆண்டுகள் மழை பெய்யாத காரணத்தினால் ஊரெங்கும் பெரும் வறட்சி நிலவியது. இதனால் பல மக்கள் இவ்வூரை விட்டு மற்ற இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். மறவர் இனம் முழுவதுமாக வெளியேறிவிட்டது. அவர்கள் வழிபட்ட கோவில்கள் இன்றும் உள்ளன. அந்த வாரிசுகளில் சிலர் இன்னமும் வந்து ராஜகன்னி மாதாவை வழிபட்டுச் செல்கின்றனர். ஆச்சரியபுரம் பகுதியில் வாழ்ந்து வந்த பிரிவினை சபை கிறிஸ்தவர்களில் சிலர் புனித ராஜகன்னி மாதா கோவிலில் வந்து இணைந்து விட்டனர். ஆண்டு தோறும் ராஜகன்னி மாதாவுக்கு திருவிழா நடத்தி வந்தனர். கோவிலும் அதைச் சார்ந்த இடங்களும் 'வைரவம்' ஊரைச் சார்ந்த பிள்ளைமார்கள் பெயரிலும், 'புத்தன் தருவை' ஊரைச் சார்ந்த சில இஸ்லாமியர்கள் பெயரிலும் இருந்ததால் ஆண்டுதோறும் "நிலவாதம்" என்ற பெயரில் அவர்கள் கோவில் நிர்வாகிகளிடம் பணம் பெற்றுச் சென்றுள்ளனர். நாளடைவில் அவர்கள் மனசாட்சிக்குட்பட்டு, 'கோவில் சம்மந்தப்பட்ட நிலத்தை கோவில் பெயருக்கே வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கோவில் நிர்வாகிகளிடம் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். கோவில் நிர்வாகிகள் அவர்களிடம் 150 ருபாய் கொடுத்து அந்த இடத்தை வாங்கிக் கொண்டார்கள். அந்த சமயத்தில் கோவிலில் இருப்புப் பணம் மொத்தம் 240 ருபாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு :
                    இந்த தகவல்களை சேகரித்துக் கொடுத்த கடகுளத்தைச் சார்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. S. கார்லஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment